World

யூதர்களைப் படுகொலை செய்தமைக்காக ஹிட்லரைப் புகழ்ந்த துருக்கி அரசியல்வாதி!

உலகைச் சுத்தப்படுத்த இஸ்ரேல் அழிக்கப்படவேண்டுமாம்

ஜூதர்களைப் படுகொலை செய்தமைக்காக அடோல்ஃப் ஹிட்லரைப் பாராட்டிய துருக்கி நாட்டின் அரசியல்வாதி ஒருவர் “நாஜி தலைவருக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

துருக்கி ஜனாதிபதி ரயிப் எர்டோகனின் கட்சியைச் சேர்ந்தவரும் சம்சுன் மாகாணத்தின் அட்டகும் மாவட்ட கவுன்சிலருமான சுலைமான் சேசென் என்பவரே இக்கருத்தைத் தெரிவித்தவராவார்.

புதனன்று அவர் தெரிவித்த கருத்தில் ” ‘கொல்லப்படாத ஒவ்வொரு யூதருக்குமாக நீங்கள் என்னைச் சபிப்பீர்கள்’ என ஹிட்லர் சொல்லியிருந்தார். எவ்வளவு உண்மையான வார்த்தைகள். உலகில் குழப்பத்தை விளைவிக்க எடுக்கப்படும் ஒவ்வொரு முயற்சிகளின் பின்னாலும் இப்போது இஸ்ரேல் இருக்கிறது. யூதர்களை அகற்றியதன் பின்னர் உலகில் அமைதி நிலவும். இவ்வார்த்தைகளைச் சொன்னமைக்காக ஹிட்லர் மீது கடவுளின் இரக்கமும் கிருபையும் இருக்கும்” என சுலைமான் சேசன் தெரிவித்திருந்தார்.

சேசன் சபையில் இக்கருத்துக்களைத் தெரிவித்தபோது சபையிலிருந்த இன்னுமொரு உறுப்பினர் எழுந்து “அது ஒரு உணர்ச்சிவசப்பட்டதனால் கூறப்பட்ட கருத்து” எனச் சமாளித்திருக்கிறார்.

செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட காசா மருத்துவமனை குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலைப் பகிரங்கமாகக் குர்றம் சாட்டிய ஒரே நேட்டோ நாடு துருக்கியாகும். இக்குண்டுவெடிப்பிற்கும் தமக்கும் சம்பந்தமில்லை என இஸ்ரேல் தெரிவித்து வந்தாலும் இக்குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் துருக்கியிலுள்ள இஸ்ரேலியரை வெளியேறும்படி இஸ்ரேல் தேசிய பாதுகாப்புச் சபை கோரிக்கை விடுத்திருந்தமை இஸ்ரேலின் மீதான துருக்கியின் சந்தேகத்தை வலுப்ப்டுத்தியிருக்கிறது.

மருத்துவமனைக் குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து துருக்கியில் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் இஸ்ரேலிய தூதுவரக அலுவலகமும் தீவைக்கப்பட்டது.

ஹிட்லர் கூறியதான இம்மேற்கோள் 2018 இல் வாசிங்டனைச் சேர்ந்த மத்திய கிழக்கு ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையில் இருந்து எடுக்கப்பட்டது. இவ்வாய்வு நிறுவனம் முன்னாள் இஸ்ரேலிய உளவதிகாரி ஒருவரினால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒன்றாகும். தற்போது இம் மேற்கோள் துருக்கியின் ருவிட்டர் (X) தளத்தில் பிரபலமாகப் பகிரப்படும் ஒன்றாகும்.