முந்நாள் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மரணம்

முந்நாள் இந்திய வெளியுறவு அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியஸ்தருமான சுஷ்மா ஸ்வராஜ் இன்று மாரடைப்பால் மரணமானார். இறக்கும்போது அவருக்கு 67 வயது.

சுகவீனம் காரணமாக கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.

இறக்கு முன்னர் அவர் அனுப்பிய கீச்சல் செய்தியில் ஜம்மு-காஷ்மீர் விடயத்தில் அதன் விசேட அந்தஸ்தை வாபஸ் வாங்கியதோடு அதை இரண்டாகப் பிரித்தமைக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்திருந்தார். “நரேந்திர மோடி ஜி – நன்றி பிரதமரே. மிக்க நன்றி. இந் நாளின் வரவுக்காக நான் வாழ்நாள் முழுவதும் எதிர்பார்த்திருந்தேன்” என அவர் தனது செய்தியில் கூறியிருந்தார். 

அவரின் இறப்புக் குறித்துப் பல அரசியல்வாதிகளும் அனுதாபங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

“சுஷ்மா ஒரு சிறந்த பேச்சாளரும் தனித்துவமான பாராளுமன்ற உறுப்பினருமாவார். தான் சார்ந்த கொள்கைகளிலிருந்தோ அல்லது கட்சியின் கொள்கைகளிலிருந்தோ சமரசம் செய்துகொள்ளாதவர். கட்சியின் வளர்ச்சிக்கு பெரிய பங்காற்றியவர், எல்லாக் கட்சியினராலும் மதிக்கப்படுபவர்” என பிரதமர் மோடி தன் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

” சிறீமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்களின் அகால இழப்பால் நாம் துயருறுகிறோம். அவரது குடும்பத்தினருக்கும் அவரை நேசிப்பவர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்” என காங்கிரஸ் கட்சி தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறது.