மயன் அரண்மனை மெக்சிக்கோவில் கண்டுபிடிப்பு!
டிசம்பர் 26, 2019

ஆயிரம் வருடங்களுக்கு மேலான பழமையானதெனக் கருதப்படும் பாரிய மயன் அரண்மனையொன்றை மெக்சிக்கோவின் அகழ்வாராய்ச்சித் துறையிநர் கண்டுபிடித்துள்ளனர்.
மெக்சிக்கோவின் யுகடான் மாநிலத்திலுள்ள கலுபா என்ற நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின்போது, 6 மீட்டர் உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட இந்த அரண்மனையின் இடிபாடு கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வரண்மனை, இஸ்பானிய படையெடுப்பிற்கு முன்னர், கி.பி. 600 ஆண்டளவில் வாழ்ந்த மயன் ஆட்சியின் இரண்டு கூறுகளைக் கொண்டதெனக் கருதப்படுகிறது.
அக் காலகட்டத்தில், தற்போதய மெக்சிக்கோ, குவாட்டமாலா, பெலிஸ், ஹொண்டூரஸ் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரதேசம் முழுவதும் மயரின் ஆட்சியில் இருந்தது. கி.பி. 600 – 900 மற்றும் கி.பி. 850 – 1050 ஆண்டு காலங்களில் மயர்கள் இப்பிரதேசத்தில் ஆட்சி புரிந்துள்ளனரென மனிதவியல் மற்றும் வரலாற்றுக்கான தேசிய நிறுவனம் (National Institute of Anthropology and History (INAH)) கூறுகிறது.
இவ்வரண்மனையை மட்டுமல்லாது, குலுபா நகரின் மத்தியிலுள்ள பலி பீடம் மற்றும் இரண்டு குடியிருப்புக்கான கட்டிடங்கள், சூளை எனக் கருதப்படும் ஒரு வளைந்த அடுப்பு ஆகியனவும் அகழ்வாராய்ச்சியினர் ஆராய்ந்துள்ளனர்.
“பெருந்தொகையான கட்டிடங்களைக் கொண்டதெனக் கருதப்படும் மயர்களின் இடிபாடுகளை இப்போதுதான் ஆராய முற்படுகிறோம்” என அகழ்வாராய்ச்சியாளர் அல்ஃபிறெடோ பர்ரியா ராய்ட்டர் செய்தி நிறுவனத்துக்குத் தெரிவித்தார்.
கரீபியன் சுற்றுலா வலயத்தின் பிரசித்திபெற்ற கன்கூன் கடற்கரைக்கு அருகாமையில் குலுபா நகர் இருப்பதால், வெளிப்படுத்தப்பட்ட இடிபாடுகள் மனிதர்களாலும், இயற்கையாலும் மேலும் சிதைக்கப்படாமலிருக்க அப்பகுதியை மீண்டும் வனப்பிரதேசமாக ஆக்குவதற்கு பழமைபேணுவோர் விரும்புகிறார்கெளென அறியப்படுகிறது.
மயர் நாகரிகம்
மெக்சிக்கோவின் யுகடான் மாநிலத்தின் தாழ்நிலப் பிரதேசங்களில் கி.மு. 400 ஆம் ஆண்டுகளில் வாழ்ந்தவர்களெனப் கருதப்படும் மயன் மக்கள் சிறப்பாகப் பொழியப்பட்ட நடுகற்களையும், விருத்தியடைந்த மொழியையும் கொண்டிருந்தார்களென வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள்.