சுவாமி ஞானப்பிரகாசர்

மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம்

[இக் கட்டுரை ‘காலம்’ செல்வத்தின் முகநூல் பதிவிலிருந்து உருவுயெடுத்தது. மூலம் மாணிக்கவாசகர் வைத்தியலிங்கம் என்று கட்டுரையின் அடியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வரலாறு பதியப்படவேண்டுமென்ற நோக்கத்தில் இது இங்கும் பதிவாகிறது. எழுதியவர், பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் நன்றி]

யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான ஆறாவது பரராசசேகரனின் வழித்தோன்றலான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியரின் மகனாக 30.08.1875 அன்று மானிப்பாயில் பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம் ஆகும் .

அவருக்கு ஐந்து வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான அச்சு வேலி யைச் சேர்ந்த செந்தமிழ்ப் புலவர் தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். வைத்தியலிங்கம் என்ற சிறுவனுக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. தாயும் மகனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர். அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கிலப் பாடசாலை ஒன்றில் தொடக்கக் கல்வியைக் கற்ற அவர், யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார். இவரின் மேல் உள்ள அன்பின் காரணமாக மானிப்பாயிலும் அச்சுவேலி யிலும் இவரை கனகரத்தினம் என்றே அன்புடன் அழைத்தனர் .

ஞானப்பிரகாசத்துக்கு பதினெட்டு வயது நடக்கும் போது நாவலப்பிட்டியில் இருந்த அவரது தாய்மாமனுடன் சிறிது காலம் தோட் டத்தில் கணக்கு எழுதுபவராக வேலை செய்து வந்தார். பின்னர் 1893 இல் தொடர்வண்டித் துறையில் எழுதுவினைஞர் தேர்வில் முதலாவதாகத் தேறி கடிகமுகவி லும் பின்னர் கொழும்பிலும் மூன்று ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைப்பணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரெஞ்சும் அவரை பல மொழிகளையும் கற்றிடத் தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதைக் கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை கற்றுப் புலமை பெற்றார்.

இறைவன் தொண்டில் முதல் பங்காக ஊர்காவற்றுறை எனும் ஊரில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்களிடையே படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். மறை நூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையைச் செயல்படுத்தினார். 50க்கும் மேற்பட்ட நூல்களைத் தாமே இயற்றி 30க்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார். ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகர வரிசை’ என்ற பெயரில் இவர் வெளியிட்ட தமிழ் ஒப்பியல் அகராதி சிறந்த நூலாகும்.

‘ஞான உணர்ச்சி’ எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதன்று, சாங்கோபாங்க சுவாமிகளே அந்நூலை எழுதினார் என இடித்துரைத்தார்.இவரது பன்மொழியறிவையும் சொல்லாராய்ச்சித் திறனையுங் கண்டு ஈழத்துத் தமிழ்ப்புலவர் மன்றம் இவரைப் பாராட்டி சொற்கலைப்புலவர் என அழைக்கலாயினர் .நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தைக் கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்பட்டார்.

18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மயில்வாகனப் புலவர் என்பவரால் யாழ்ப்பாண வரலாற்றை எடுத்துரைக்கும் பொருட்டு எழுதப்பட்ட யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட வரலாற்று முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் ஞானப்பிரகாசர் எடுத்துக் காட்டியுள்ளார். (மயில்வாகனப் புலவர் யாழ்ப்பாணத்தை ஒல்லாந்தர் ஆட்சி செய்த காலத்தில் வாழ்ந்தவர். அக்காலத்தில் இருந்த ஒல்லாந்த அதிகாரியொருவரின் வேண்டுகோளுக்கிணங்க யாழ்ப்பாண வைபவமாலை என்னும் யாழ்ப்பாணச் சரித்திர நூலை இயற்றினார் )

சுவாமி ஞானப்பிரகாசருக்கு மதிப்பளிக்குமுகமாக இலங்கை அரசு அவரது படத்துடன் கூடிய அஞ்சல் முத்திரை ஒன்றும், சிறப்பு முதல் நாள் உறை ஒன்றையும் 1981 மே 22 இல் வெளியிட்டது. வழமையாக நினைவு முத்திரைகள் தலைநகர் கொழும்பிலேயே வெளியிடப்படும். ஆனால் இந்த முத்திரை ஞானப்பிரகாசரின் ஊரான யாழ்ப்பாணத்தில் வெளியிடப்பட்டது. வீரசிங்கம் மண்டபத்தில் சிறப்பாக நிறுவப்பட்ட அஞ்சல் அலுவலகத்தில் யாழ் ஆயர் அதி வணக்கத்துக்குரிய எஸ். தியோகுப்பிள்ளை ஆண்டகை முன்னிலையில் யாழ்ப்பாணம் பிரதம அஞ்சல் அதிபர் தி. தியாகராசாவிடமிருந்து நினைவு முத்திரையுடன் கூடிய முதல் நாள் தபால் உறையை மாவட்ட அமைச்சர் யு. பி. விஜயக்கோன் பெற்றுக் கொண்டார். ஜேர்மனிய அரசாங்கம் தனது தபால் முத்திரை ஒன்றிலே இவ ரின் உருவத்தைப் பொறித்து வெளியிட்டதென்றால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அத்தகைய புகழுக்குரியவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்.

வடமொழி, தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளை நன்கு கற்றிருந்த சுவாமியவர்கள் எழுபது மொழிகளைப் பற்றி அறிந்திருந்தார். ‘தமிழர் பூர்விக சரித்திரம்’ ‘யாழ்ப்பாணத்தரசர்கள்’ ‘ யாழ்ப்பாண சரித்திரம்’ ‘ இந்திய நாகரிகம்’ ‘தமிழர் வரலாறு’ ‘ தமிழரிடையே சாதி பிறந்த முறை’ ‘ தமிழரின் பூர்வ இருப்பிடம்’ ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ ‘தமிழ்ச் சொற் பிதிர்’ ‘தமிழ்த் தாதுக்கள்’ ‘மொழிக்குடும்பம்’ ‘தருக்க சாஸ்திரம்’ என்பன சுவாமியவர்களின் அரிய நூல்களாகும். ஒரு மொழியின் ஆராட்சி வேலைகளில் அகராதி தொகுப்பதும் ஒரு துறையாகும். மிகக் கடினமான இத்துறையிலே யாழ்ப்பாணம் என்றுமே முன்னணியில் நின்றிருப்பதை எவருமே ஒப்புவர். இந்த அகராதி வரிசையில் புதியதொரு பாதையை வகுத்துச் ‘சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’ என்ற பெரும் பணியைச் செய்த இத்தொண்டே சுவாமியவர்களை தமிழரும் மேலைநாட்டாரும் என்றென்றும் நினைவில் வைத்திருக்கப் போதுமானது.

1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி மானிப்பாய் மருத்துவ மனையில் மரணமானார். அவரது 60வது வயதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நோயினால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியிருந்ததென்றாலும் அந்த ஆபத்திலிருந்து அவர் தப்பிப்பிழைத்திருந்தார். ஆனால் 1947ம் ஆண்டில் அவருடைய 72ம் வயதில் நெருப்புக்காய்ச்சல் அவருடைய உயிரை விட்டுவைக்கவில்லை.

இவர் வாழ்ந்திருந்த 72 ஆண்டுகளில் தமிழுக்கும் தான் சேர்ந்திருந்த சமயத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன, மகத்தானவை. அவருடைய பெயரும் புகழும் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பரவியிருந்தன. அவருடைய தமிழ்த்தொண்டை பாராட்டித் தமிழ் நாட்டில் அறிவுக்களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியிருந்தது.

அறிவு ஆராய்ச்சி செய்திறன் ஆகியவற்றுக்கு பெயர் எடுத்திருந்த ஜேர்மனி, சுவாமி ஞானப்பிரகாசரின் பெருமையை உணர்ந்து மதித்து 1939ம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய உருவத்துடன் ஒரு முத்திரையை வெளியிட்டு அவரை கௌரவித்தது. இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அவருடைய நினைவாக ஒரு முத்திரையை வெளியிட்டிருந்தது. இன்று திராவிட மக்களின் புராதன நாகரிகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் சிந்து நதிப்பள்ளத்தாக்கிலுள்ள் ஹரப்பா , மொஹஞ்சதாரோ நகரங்களின் எழுத்து ஆராய்ச்சியிலீடுபட்டிருந்த ஹெரஸ் பாதிரியார் என்பவர் தனக்கு ஏற்ப்பட்டிருந்த சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவரைத் தேடி வந்து ஆலோசனை கேட்குமளவிற்கு அறிவும் ஆராய்ச்சியும் பெருமையும் கொண்டவராகவிருந்தார்.

எட்டாவது பரராசசேகரின் பரம்பரையில் சைவக்குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். அவர் பிறந்த பொழுது பெற்றோர்கள் அவருக்கு இட்டிருந்த பெயர் வைத்திய லிங்கம் என்பதாகும். கனகரத்தினம் என்ற செல்லப்பெயரினால் அவர் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தையார் ஒரு ஆசிரியர். இராசசிங்கம் சுவாமிநாதன்பிள்ளை என்பது அவருடைய பெயர். இராசசிங்கம் அவர்கள் வேலக்கைப் பிள்ளையார் கோவில் ‘பரிபாலகராகவும்” இருந்தவர் தாயார் பெயர் தங்கமுத்து ஆகும். இவர் காடினர் சிற்றம்பலம் என்பவரின் மகளாகும். கார்டினர் சிற்றம்பலம் பற்றி எனது பதிவைப் பார்க்கவும்

ஞானப்பிரகாசருக்கு 5 வயதிருக்கும்போது அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். அதன் பின்பு அவருடைய தாயார் அச்சுவேலியிலிருந்த தம்பிமுத்து என்ற கத்தோலிக்கரை மறுமணம் செய்து கொள்வதற்காக அம்மதத்திற்கு சேர்ந்த பொழுது அவருடைய மகனும் கத்தோலிக்க மதத்தில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு இடப்பட்ட பெயரே ஞானப்பிரகாசம் என்பதாகும். காலப்போக்கில் அவருடைய புகழும் மதிப்பும் வளரத்தொடங்க ஞானப்பிரகாசம் என்ற அவருடைய பெயர் ஞானப்பிரகாசர் என்ற மரியாதையுடன் வழங்கி வரப்படலாயிற்று.

ஞானப்பிரகாசருடைய வளர்ப்புத்தந்தையார் தம்பிமுத்து அவர்கள் ஒரு நல்ல தமிழ் அறிஞர். அச்சுவேலியில் ஒரு அச்சுக்கூடம் வைத்திருந்து தமிழில் பல கத்தோலிக்க சமய நாடகங்களை வெளியிட்டு வந்தார். சன்மார்க்கப் போதினி என்ற ஒரு சமய சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். ஞானப்பிரகாசருக்கு அவருடைய அச்சுக்கலையில் பயிற்சி அளித்ததோடல்லாமல் தமிழில் ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தி இருந்தார். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவையும் புகட்டியிருந்தார் ஞானப்பிரகாசர் சிறுவயதிலேயே இலக்கணப்பிழையின்றி விரைவில் கவிதை இயற்றும் ஆற்றல் உள்ளவராக இருந்தார். வயலின் வாசிப்பதிலும் மத்தளம் அடிப்பதிலும் வல்லவராக இருந்தார். சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது லண்டனில் இருந்து வெளிவந்த ” POETRY LONDON ” என்ற ஆங்கிலக் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல ஆங்கிலக்கட்டுரைகளை ஊக்குவித்த கவிஞர் தம்பிமுத்து (MEARY JAMES THURAIRAJAH) என்பவர் ஞானப்பிரகாசரின் தாய் வயிற்றில் தம்பிமுத்துவுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான ஹென்றி தம்பிமுத்துவின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக்கொண்ட ஞானப்பிரகாசர் 1893ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ரெயில்வே கிளறிக்கல் பரீட்சையில் மிகத் திறமையாகத் தேர்ச்சியடைந்து கடிகமுவைப் புகைவண்டி நிலையத்தில் பணி புரிந்தார். அங்கு அவர் தன் கடமையில் திறமை காட்டியதன் காரணமாக கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். மோஸ் கோட் மூலம் விரைவாகச் செய்தி அனுப்புவதில் வல்லவராக இருந்தார். அங்கு அவர் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் அக்காலத்தில் இலங்கையர்களுக்கு அரசாங்கப்பதவிகளில் கிடைத்திருக்கக் கூடிய உயர்ந்த பதவிகளில் ஒன்று அவருக்குக் கிட்டியிருக்கும். ஆனால் சுயவிருப்பின் பேரில் 1895ம் ஆண்டில், சேவையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள், அச்சேவையிலிருந்து விலகி கத்தோலிக்க குருவானவர் ஆகும் பொருட்டு யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து கொண்டார். 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு அவர் தமது சமயக் கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்கும் பரப்புவதற்கும் பல பிரசுரங்களை வெளியிட்டு வரலானார். தர்க்கப்பிரசங்கம் என்ற விவாதங்களை மக்கள் மத்தியில் நடத்திவந்த தோடல்லாமல் அவ்விவாதங்களை வெளியிட்டு மக்களுக்கு வழங்கியும் வந்தார். கத்தோலிக்க சமய சம்பந்தமான சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். 1896ம் ஆண்டிலிருந்து 1906ம் ஆண்டுவரை அமலோற்பவ இராக்கினித் தூதன் என்னும் மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

எழுபத்திரண்டு மொழிகளில் அவருக்கு இருந்த அறிவும் பலதுறைகளில் இருந்த ஞானமும், அவருடைய மதிநுட்பமும் ஆழ்ந்த அகன்ற ஆராய்ச்சித்திறனும் பல ஆண்டுகள் ஆராய்ந்து செய்தபின்பு எடுத்த முடிவுகளை மறுத்துரைக்க அவருக்குத் துணையாயிருந்தன.

தாய் மொழியின் தொன்மையை, மேன்மையை, தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக ஒப்புயர்வற்ற சொற்பிறப்பு ஒப்பியல் என்னும் அகராதியைத் தன்னந்தனியாகத் தானே தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளில் தான் திட்டமிட்டிருந்த இருபது பாகங்களில் ஆறு பாகங்களை வெளியிட்டிருந்தார். எஞ்சிய பாகங்களின் சொற்களில் பெரும்பாலானவற்றை ஆராய்ந்து கையெழுத்துப் பிரதிகளில் வைத்திருந்தார். அவற்றை அவர் வெளியிடுவதற்கு முன்பு காலன் அவரின் உயிரைப்பறித்துச் சென்றது தமிழ் மக்களின் துர்ப்பாக்கியமே

யாழ்ப்பாண மேற்றிராசனத்திலிருந்து இதுவரை வேறு எந்த குருவானவரும் செய்திராத அளவுக்கு அவர் பல கோவில்களைக் கட்டுவித்து மீசாம்களை ஏற்படுத்தியிருந்தார். 1946ம் ஆண்டில் அவர் இறப்பதற்கு சற்று முன்பு, அவர் பிறந்த ஊராகிய மானிப்பாயில் அவர் கட்டுவித்திருந்த கோவில் முப்பத்தேழாவது கோவிலாகும் கோவில்களைக் கட்டுவித்ததோடல்லாமல் அங்குள்ள மக்களின் அறிவை வளர்ப்பதற்காக வாசிகசாலைகளையும் அங்கு ஏற்படுத்தி வந்தார். சமயத் தொண்டில் வேகமாக உழைத்து வந்தபொழுதும் அவருடைய தமிழ் ஆர்வமும் பற்றும் அவரைத் தமிழை ஆழமாகப் படிக்கவைத்ததோடல்லாமல் பிற மொழிகள் பலவற்றையும் படிக்கத்தூண்டின. எழுபத்திரண்டு மொழிகளை அவர் அறிந்திருந்தார். அவற்றுள் பெரும்பாலானவற்றை அவர் தாமாகவே கற்றிருந்தார். பன்னிரண்டு மொழிகளில் அவர் மிக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
மொழிகளில் மாத்திரமின்றி சரித்திரம், தத்துவம், சமயம் முதலியவற்றிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. யாழ்ப்பாணச் சரித்திரத்தை விஞ்ஞான முறைப்படி முதல்முதலாக எழுதியவர் ஞானப்பிரகாசரே. சைவ சமயத்தைப்பற்றி “சைவ சித்தாந்தம்” என்ற நூலை எழுதியிருக்கிறார். “செகராசசேகரன்” என்ற ஒரு நாவலையும் கூட எழுதியிருக்கிறார்.
தமிழ்மொழி தொன்மையானது, தனித்துவமானது, பல மொழிகளுக்குத் தாயானது, சில மொழிகளுக்குக் கடன்கொடுத்து உதவியிருக்கிறது என்பதை அவர் துணிந்து எடுத்துரைத்தார். பல அறிஞர்களின் உழைப்புடன் 1913ம் ஆண்டில் தொடங்கப்பட்டு அக்காலத்தில் 410,000 ரூபா செலவில் 1936ம் ஆண்டு முடிக்கப்பட்டிருந்த சென்னைத் தமிழகராதியிலும் அதன் அனுபந்தத்திலும் வடமொழியிலிருந்து பிறந்த சொற்கள் என்று காட்டப்பட்டிருந்த சொற்களில் பல தொன்மொழியிலிருந்து பிறந்தன என்றும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எடுத்துரைத்தார். வாதாடினார். கட்டுரைகள் எழுதினார்.சிலவற்றை பதிப்பிக்க முன்பே மறைந்து விட்டார் . இவர் சைவத்துக்கும் தமிழுக்கும் கிறித்தவத்துக்கும் செய்த சேவை சொல்லில் அடக்க முடியாதவை .

தமிழர் பூர்வீக சரித்திரம், யாழ்ப்பாணத்தரசர்கள், யாழ்ப்பாண சரித்திரம், இந்திய நாகரிகம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, தமிழர் வரலாறு, தமிழரிடையே ஜாதி பிறந்த முறை, தமிழ் சொற்பிதிர், தமிழ்த் தாதுக்கள், மொழிக்குடும்பம், தருக்க சாத்திரம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். அவற்றில் பெரும்பாலானவற்றை இவரே வெளியிட்டார்.

இவரது ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில், தமிழ் சொற் தொகுதிகள், பெயரீடு, முதற் சொல்லடிகள், வழிச்சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் வேற்றுமை உருபுகள், காலங்காட்டும் இடை நிலைகள் உள்ளிட்ட தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இலங்கையில் வெளிவந்த, ஈழகேசரி, இந்து சாதனம், பாது காவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு உள்ளிட்ட இதழ்களில் கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதிவந்தார். சத்திய வேதப் பாதுகாவலன், குடும்ப வாசகம், அமலோற்பவ ராக்கினி தூதன் உள்ளிட்ட மாத இதழ் களுக்கு ஆசிரியராகப் பணியாற்றினார்.
இலங்கை யாழ்ப்பாண வரலாற்று சங்கத்தின் துணைத் தலைவர், பின்னர் தலைவராகவும், ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

கவியோகி சுத்தானந்த பாரதியார் இவரை புகழ்ந்து பின்வருமாறு பாடினார்

“தமிழே யுலகத் தாய்மொழியென்று

பறையடித் தோதிய பன்மொழிப் புலவன்

சொல்லாராய்ச்சியும் தொல்லா ராய்ச்சியும்

வல்லவன் ‘பைபிள்’ வழியே நடப்போன்

மலையுப தேசமே கலையெனக் கொண்ட

ஞானப் பிரகாச நாவலன் இலங்கை

என்றும் போற்றும் எழிலார் வித்தகச்

செல்வனைத் தமிழர் சிந்தித்து நிதம்

புரிக தமிழ்ப்பணி பொலிக நல்லறிவே”

என்று .

இன்று கத்தோலிக்கர்கள் பலர் இவரை மறந்து விட்டனரோ என்கிற கவலையினாலேயே இந்தப் பதிவை உங்களுக்குத் தருகிறேன்

மேலும் சுவாமி ஞானப்பிரகாசர், வரலாறு, அரசியல், மானிடவியல், சமூகவியல், எழுத்துமுறை, சொல் லொற்றுமை, இடப்பொயர்கள், சமய வரலாறு, சமய வழிபாடுகள், பழக்க வழக்கங்கள் முதலிய வற்றினை அடிப்படையாகக் கொண்டு தமது ஆராய்ச்சியினை மேற்கொண்டார். சுவாமி ஞானப்பிரகாசர், மொழியின் வரம்பாக மட்டுமே இருந்த இலக்கண உலகை ஆராய்ச்சி உலகாக மாற்றியமைத்தவர். மண்ணோடு மண்ணாகப் புதையுண்டு கிடந்த திராவிட நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்தையும் தமது ஆய்வு நூல்கள் மூலம் அகிலத்துக்கு வெளிப்படுத்தியவர் சுவாமி ஞானப் பிரகாசர்.

கத்தோலிக்க தேவாலயங்களில் தமிழில் செபம் செய்தல் வேண்டுமெனத் தீர்மானிக்கப்பட்ட போது, செபங்களை தமிழில் மொழிபெயர்த்து அளித்தவர் சுவாமிஞானப்பிரகாசர். ஞானப்பிரகாசர் கிருஸ்துவ சமய அனுசார நூல்கள், பிரசங்க நூல்கள், செப நூல்கள், வரலாற்று ஆராய்ச்சி நூல்கள், சமய வரலாற்று நூல்கள், மொழி ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள் என நூற்றுக்கணக்கான நூல்களை எழுதி அளித்துள்ளார்.

யாழ்ப்பாண வைபவ விமர்சனம், தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும், தமிழரின் ஆதி இருப் பிடமும் பழஞ்சீர்திருத்தமும், தமிழ் அமைப்புற்றா தெவ்வாறு, திராவிட சொல்லிணக்கத்திற்கு சில விதிகள், யாழ்ப்பாணத்து தொல்குடிகள், தமிழரில் சாதி உற்பத்தி, தமிழ் மொழி ஒப்பியல் அகராதி, தமிழ் சொற்பிறப்பாராய்ச்சி, தமிழ் மொழி ஆராய்ச்சி, பூர்வீக இந்திய வரலாறும் காலமும், யாழ்ப்பாண இடப்பெயர் வரலாறு, முதலிய தமிழர் வரலாறு முதலிய நூல்களையும் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி நூல்களையும் படைத்தளித்துள்ளார். ‘செகராசசேகரன்’ என்னும் நாவலை எழுதி அளித்துள்ளார்.

இன்னும் விபரமாக சொல்வதானால்
kings of Jaffna during the Portuguese period, History kings of Jaffna during the Portuguese period, History of Jaffna under the Portuguese and Dutch Rule, Ancient kings of Jaffna, Early History of Tamils and the religion, origin of caste among the Tamils, Indian ancientChronology and Civilization, Life from the Excavations of the Indus Valley, Early History of the Ancient popes,Catholicism in Jaffna, 25 years of catholic progress in the Diocese of Jaffna, Origin and History of the CatholicChurch in Ceylon, Philosophical Saivaism or Saiva Siddhanta, Historical aspect of Christianity and Buddhism,How Tamil was built up, An English – Tamil Dictionary,Some laws of Dravidian Etymology, The DravidianElement in Sinhalese, Root words of the Dravidian group of Languages, The Proposed comparative Tamil Lexicon முதலிய ஆங்கில நூல்களையும் எழுதி அளித்துள்ளார்.

மேலும், ஆண்டவர் சரித்திரம், சுப்பிரமணியர் ஆராய்ச்சி, பிள்ளையார் ஆராய்ச்சி, மிருகபலி ஆராய்ச்சி, மறுபிறப்பு ஆட்சேபம், சைவர் ஆட்சேப சமாதானம், புதுச் சைவம், புதுச் சைவமும் புலால் உண்ணாமையும், இலங்கை கத்தோலிக்கத் திருச்சபை வரலாறு, ஆதிகாலத்துப் பாப்புமார் சரித்திரம் முதலிய சமயத் தொடர்பான நூல்களை எழுதி வழங்கி யுள்ளார். உபதேசியார் சந்தியாபிள்ளை நற்சரிதை, பரிமான் என். ஆர். முத்துக்குமாரு, Life of Cecilia Rasamma, Chryasanthus Daria முதலிய வாழ்க்கை வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

ஞானப்பிரகாசர் தமது வரலாறு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சி கட்டுரைகளைCeylon Antiguary and Literary Register, Journal of the Ceylon Branch of the Royal Asiatic Society, Journal of the Mystic Society, Indian Historical Quarterly, Daily News, Times,Tamil Culture முதலிய ஆங்கில இதழ்களிலும், மதுரைத் தமிழ்ச் சங்க இதழான செந்தமிழ், ஈழத்து ஈழகேசரி, இந்து சாதனம், பாதுகாவலன் மற்றும் தமிழகத்திலிருந்து வெளிவந்த கலாநிலையம், கலைமகள், ஞாயிறு முதலிய இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். ‘சத்திய வேதப் பாதுகாவலன்’, ‘குடும்ப வாசகம்’, அமலோற்பவ இராக்கினி தூதன்’ முதலிய மாத இதழ்களுக்கு ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

தமிழ் மொழியின் அடிப்படை பற்றியும், ஏனைய மொழிகளுடன் அதன் தொடர்பு பற்றியும் ஆராய்ந்து, அவரது காலம் வரை யாரும் எடுத்துரைக்காத, தமிழ் மொழிக்கு முதன்மை அளிக்கும் கோட்பாடு ஒன்றை நிறுவினார். இவர் கடும் முயற்சி செய்து, ‘தமிழ் மொழியின் சொற்பிறப்பு ஒப்பியல் – அகராதி’ என்ற நூலை எழுதி இரண்டு தொகுதிகள் வெளியிட்டார். ஒப்பியலாய்வினைச் சுவாமிகள் தமிழ் மொழி ஆராய்ச்சியிலும், பண்டைத் தமிழர் வரலாற்றாய்விலும் பயன்படுத்தியுள்ளார். தமிழர் வரலாற்றினை, ஆரியர், சீனர் குறிப்பாக ஆதிகால மேற்காசிய, எகிப்திய சமூகங்கள் முதலிய பிற வரலாற்றுடன் ஒப்பிட்டு ஆராய்ந்துள்ளார்.

“பழமையான சீர்திருத்தத்தினால் புகழ் படைத்தவர்களாய், உலகத்திலெல்லாம் அதி இனிமை யான மொழிகளுள் ஒன்றைப் பயிலுகின்றவர்களாய், தென்னிந்தியாவைத் தங்கள் சுய பூமியெனக் கொண்டவர்களாய், பல நூற்றாண்டுகள் தொட்டு விளங்கியிருக்கின்றவர்கள் தமிழரோயாவர். அவர் களது பூர்வீகம் யாது. அவர்களது ஆதிச்சமயம் எத் தன்மையது என ஆராயும் இச்சிறுநூல்” எனத் Ôதமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்Õ என்ற நூலின் முகவுரையில் சுவாமி ஞானப்பிரகாசர் குறிப்பிட்டு உள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசர் தமது ஆராய்ச்சி முடிவுகளை ஆங்கிலம் போன்ற பிற மொழியில் மட்டுமின்றிக் குறிப்பாகத் தமிழில் எழுதியுள்ளார். தமிழ் மொழி தக்க இடத்தினைப் பாடத் திட்டத் திலோ, சமூகத்திலோ பெற்றிராத காலத்தில், தமது தாய் மொழியான தமிழிலேயே ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘தமிழரின் பூர்வ சரித்திரமும் சமயமும்’ எனும் நூலில், பழந்தமிழ், ஆரியத் தொடர்புகள், பழைய தமிழ் நூல்கள், பழந்தமிழர் மத்தியில் நிலவிய சமூக நிலைமைகள் முதலியவைகள் குறித்து ஆராய்ந்து விரிவாக விளக்கியுள்ளார். மொழி ஆக்கத் துறையில் அவரது தனிப்பெரும் சாதனை, அவர் எழுதி அளித்த ‘சொற்பிறப்பு ஒப்பியல் அகராதி’ ஆகும்.

“திராவிட மொழிகளிலுள்ள வேர்ச் சொற்கள் வெற்றொலிகள் அல்ல. அவை அனைத்தும் பொருள் பொதிந்த மொழிகள் என்பதை நிறுவியுள்ளார். தமிழ்ச் சொற்களுக்கு மிக எளிதாக சமஸ்கிருத வேர்ச்சொற்களை மூலமாகக் காட்டுவது ஒரு சம்பிரதாயம், இதையட்டியே உலகம், கலை, நகுலம் போன்ற பல சொற்களுக்கு சமஸ்கிருதர்தாது காட்டப்பெற்றன. சுவாமி ஞானப்பிரகாசர் இச் சொற்களுக்கெல்லாம் தமிழ் வேர்ச் சொற்களை ஆராய்ந்து காட்டியுள்ளார்” எனப் பேராசிரியர். மாஸ்கரேனஸ் பதிவு செய்து உள்ளார்.

“இதற்கு முன்பு தமிழ் அகராதி செய்தோர் எல்லாம், ஒவ்வொரு சொல்லிற்கும் உரிய பொருளை ஆராய்ந்து மேலும், மேலும் சிறப்புற விளக்கினரே அன்றி, சொற்களுக்குப் பிறப்பிடமாய் நின்ற அடி களை முறைப்படி தேடிக் கண்டு அவற்றின் கீழ் உள்ள கிளைச் சொற் கூட்டங்களை அமைத்தவரல்லர். அது மட்டும் அன்று, தமிழடிகளை அறுதியிடுவதற்கு உரிய கட்டளைகளை வகுப்போரும் எக்காலத்தாவது தோன்றியிராமையால், தமிழிற்கு அடிகள் தாம் உளவா, என்ற ஐயுறவிற்கும் இடம் உண்டாயிற்று. ஆயிரத்தில் ஒரு தமிழ்ச் சொல்லுக்கு அடியன்று இருப்பதாக ஆசிரியர் சிலர் ஆங்காங்குக் குறித்தறிந்தது உண்மையே. ஆயினும், தமிழ்ச் சொற்றொகுதி முழுதும் ஒரு சில தலையடிகளிலே நின்று முளைத்துக் கிளைத் துள்ளது எனும் உண்மை இதுவரையிலும் பிறரால் நிலைநாட்டப்படாதது ஆயிற்று. அதனால், பிற மொழிகளோடு தமிழுக்கு உள்ள ஒப்பியலைத் தெளிவித்தல் பற்றி கூறவும் வேண்டுமல்லவா, ஆகையினால் ‘சொற்பிறப்பு – ஒப்பியல் தமிழ் அகராதி’ எழுந்தது என்க” என இந்நூல் உருவானதற்கான தேவையை தெளிவுபடுத்தியுள்ளார் சுவாமி ஞானப் பிரகாசர்.

‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ (How Tamil was built up) என்ற நூல் தமிழ் சொற்களின் உண்மைப் பிறப்பை விளக்கும் நூலாகும். மேலும், இந்நூலில் தமிழ் சொற் தொகுதிகள், இடம் பற்றிய பெயரிடு, முதற் சொல்லடிகள், வழிச் சொல்லடிகள், சொல் அர்த்தங்கள் விரிந்த விசித்திரம், பிரதிப் பெயர்கள், பெயர் விகுதிகள், வேற்றுமை உருபுகள், காலங் காட்டும் இடைநிலைகள், செயவெனச்சம், வியங் கோள், எதிர்மறை, பிறமொழிகளிற் தமிழடிகள் முதலிய தலைப்புகளில் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியளித்துள்ளார் சுவாமி ஞானப்பிரகாசர்.

தமிழ்ச் சொற் பிறப்பாராய்ச்சி (Studies in Tamil Etymology) என்னும் நூலில் தமிழ் அடிச் சொல் இயல்பு, வழிச் சொல்லாக்கக் கட்டளைகள், மேலும் நான்கு கட்டளைகள், சொற்சிதைவு, பொருள் வேறுபாட்டு முறை, ஆரிய மொழிகளில் வழிச் சொல்லாக்கம் முதலிய ஆராய்சி கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

சுவாமி ஞானப்பிரகாசரின் இந்து சமய வரலாற்று விமர்சனத்தை சைவ உலகம் முற்றாக வெறுத்து ஒதுக்கியது எனக் கொள்ள முடியாது. தமிழகத்திலுள்ள பிரபலமான சைவ மடங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌர வித்தது. மேலும், இவரது, தமிழ்ச் சொற் பிறப் பாராய்ச்சி என்னும் நூலை வெளியிட நிதி உதவியும் வழங்கியுள்ளது என்பது வரலாற்றுச் செய்தி.

சுவாமி ஞானப்பிரகாசர் எழுதி அளித்துள்ள ‘தருக்க சாத்திரச் சுருக்கம்’ என்னும் நூல், “குறித்து இக்கால அவசியத் தேவையைப் பூர்த்தி செய்வதோடு, புதிய ஆரம்ப நூலாக தருக்கம் பயிலும் மாணவர் களுக்கு பாடப்புத்தகமாய் இடம் பெறத் தகுதியும் சிறப்பும் பெற்றிருக்கிறது. சுவாமியின் பன்மொழி ஆராய்ச்சியும், தமிழ் அமைப்புற்ற வரலாற்றை அறிந்த சிறப்பும், ஆங்கிலச் சொற்களுக்கேற்ற புதுச் சொற்களைப் பெய்து எழுதக்கூடியதாயிற்று” என அக்காலத்தில் இலங்கையில் கல்வி உயர் அதிகாரியாகப் பணிபுரிந்த உவாட்சன் பாராட்டியுள்ளார்.

இந்திய பூர்வீக வரலாற்றினை ஆராய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த ஸ்பானிய கிருத்துவ சமயத்துறைவியும், மும்பை பல்கலைக் கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியரும், இந்திய புதை பொருளாராய்ச்சிக்குக் கழகத் தலைவருமான ஹெராஸ் சுவாமி, ஞானப்பிரகாசர் அடிகளாருடன் இணைந்து, சிந்து சமவெளி நாகரிகம் பற்றிப் பல ஆய்வுகளை மேற்கொண்டு, இந்நாகரிகம் திராவிடருக்கே முற்றிலும் சொந்தம், திராவிடரின் தனிப்பெரும் சொத்து என உலகிற்கு உணர்த்தினார்.

அறிஞர் ஹெராஸ் பாதிரியார், சிந்து சமவெளியின் 4000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டுகளை படித்தறிவதில் தமக்கு ஏற்பட்ட ஐயங்களைத் தீர்த்துக்கொள்ள இந்தியாவிலிருந்து 1936 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்குச் சென்று சுவாமி ஞானப்பிரகாசரைச் சந்தித்தார். அறிஞர் ஹெராஸ் பாதிரியார் எழுதியுள்ள ‘இந்து மெதித்தேரேனியன் பண்பாடு’ என்னும் நூலில், “நான் உண்மையில் சுவாமி ஞானப்பிரகாசருக்குப் பெரிதும் கடமைப்பட்டவன் ஏனெனில் மொழி ஆராய்ச்சியைக் கொண்டு அவர் புரிந்த பேருதவிகள் நான் அதிக தவறுகளை விடாமல் பெரும்பயன் அளிக்கத்தகனவாயின எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் தமிழ் மொழி ஆராய்ச்சி முடிவுகள்: எந்தமிழ் மொழியில் ஆதிச் சொல்லடிகள் பெரும்பான்மை அரைகுறையின்றி நிலவுகின்றன. எனவே, அவைதான் ஏனைய மொழி களின் அடிப்படையான சொற்பகுதிகளின் உண்மை உருவமாதல் வேண்டும். அம்மொழிகளின் பண்டைச் சொற்களை நுண்மதியால் ஆராய்ந்து ஒப்பு நோக்கிக் காண்பதுண்டாயின் யாங்கூறியது மெய்யுரையாகாமல் போகாது என்பது எனது துணிபு” என அறிவித்தார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் தாய் மொழிப்பற்று: “என்னே என் தமிழின் சொல்லமைப்பு மாட்சி! ஒவ்வோர் சொல்லையும் படிக்க – ஆராய ஆராய – நம்முன்னோர் நமது தீம்மொழியை எத்துணை அறிவு விளங்கப் புனைந்து வைத்துள்ளனர் என்ற புதுமையைக் கண்டு கழிபேருவகை எய்துகின்றோமே! இத்தகைய அருமந்த மொழியைக் பயிலுவதைக் கைவிட்டு, இம்மொழியிடத்தில் ஐயம் ஏற்று வாழுகின்ற பிற மொழிகளையே தேடிப் பயில் வோரும் தமிழ் அன்னையின் நன்மக்கள் ஆவாரா”? “அமிழ்தினும் இனியது என அறிஞர் போற்றும் எம் அரிய தமிழ் மொழியின் கட்பொருந்திய அழகு களுள் ஒன்று யாதெனில், அதன் பயனூற்றுத் தொகைப் பட்ட சொற்களின் பெரும்பாங்கானவை தம்முள் இனங்கொண்ட கூட்டங் கூட்டமாய் இயலுதலாம்” எனப் பெருமையுடன் பதிவு செய்துள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் நூல் வாசிப்பு குறித்த முன்வைப்பு: “இத்தேசத்து வாலிபர் பலர் பள்ளிக் கூட படிப்பு முடிந்தவுடன் படிப்பெல்லாம் முடிந்த தென்று எண்ணினாற் போல் ஏடுகள், புத்தகங்களைக் கட்டிப் பூச்சிகள் வாசிக்கும்படி வைத்துவிடுவது வழக்கம். வாலிபரே! உங்கள் படிப்பும் இதோடு முடிந்துவிட்டதென்று எண்ணாதிருங்கள். பள்ளிக் கூடப் படிப்பு முடிந்த பின்பு நீங்கள் வாசிக்கும் வாசிப்பினால்தான் இந்த விதை முளைத்து வளர்ந்து பூத்துக் காய்த்துக் கனிய வேண்டும். ஆகையால் வாசிப்பைக் கை நெகிழாதிருங்கள்” என வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசர் ‘நடமாடும் நூலகம்’ என்று அழைக்கப்பட்டார். பல மொழிகளிலும் காலத்துக்கு காலம் வெளிவந்த நூல்கள், இதழ்கள் மற்றும் வெளியீடுகள் அனைத்தும் அவரது நூலகத்தில் இடம் பெற்றிருந்தது. சுவாமி ஞானப்பிரகாசர், இலங்கை யாழ்ப்பாண வரலாற்றுச் சங்கத்தின் சிறந்த அறிஞராக விளங்கினார். அச்சங்கத்தின் துணைத் தலைவராகவம், தலை வராகவும் செயற்பட்டார். இலங்கை அரசு சுவாமி ஞானப்பிரகாசரை வரலாற்றுச் சுவடிகளின் ஆய்வுக் குழு உறுப்பினராக நியமித்தது. யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். இலங்கைப் பல்கலைக் கழக மூதவை (Senate) உறுப்பினராகவும் தொண்டாற்றியுள்ளார். ஆசிய அரசவையின் இலங்கைக் கிளையின் உறுப்பினராக செயற்பட்டார்.

“சுவாமி ஞானப்பிரகாசரும், சுவாமி விபுலாந்த அடிகளும் துறவிகளாயிருந்து கொண்டு மொழிப் பற்றுடன் பணிபுரிந்தவர்கள். அதே வேளையில் சமயப் பணியே தமது பிரதான குறிக்கோள் என்பதையும் மறக்காதவர்கள். ஒப்பியல் நோக்கில் ஆய்வுகளை நிகழ்த்தியவர்கள். தமிழியலுக்குப் பல வழிகளில் வளந்தேடியவர்கள். தமது சுய முயற்சியின் வலுவினால் மரபுவழித் தமிழறிஞர்களின் மதிப்பைப் பெற்றவர்கள். இறுதியில் மரபுவழித் தமிழ்க் கல்வி யாளராகவே கருதப்படும் அளவிற்கு அக்கல்வியின் விழுமியங்களோடு தம்மை இணைத்துக் கொண்ட வர்கள்” என மார்க்சிய இலக்கியத் திறனாய்வாளர் பேராசிரியர் கலாநிதி க.கைலாசபதி தமது ஆய்வில் பதிவு செய்துள்ளார்.

சுவாமி ஞானப்பிரகாசரின் அறிவு, ஆராய்ச்சி, செயல்திறன் ஆகியவற்றினைப் பாராட்டி ஜெர்மனி நாட்டு அரசு அவரைக் கௌரவித்து, அவரது உருவம் பதித்த முத்திரை வெளியிட்டு பெருமைப்படுத்தியது. வெளி நாடொன்றில் இத்தகைய மதிப்பினைப் பெற்ற முதற்தமிழர் என்ற பெருமை சுவாமி ஞானப் பிரகாசரையே சாரும். “கத்தோலிக்கத் திருப்பணிகளைத் தவிர்த்து, இவர் ஆற்றிய ஆக்கப்பணிகள் தமிழியற்பணிகள் – தமிழ்ப்பணி, வரலாற்றுப் பணி ஆகியனவற்றுக்குச் சமமான முக்கியத்துவம் அளித்து பாடுபட்டார்” என ‘ஈழகேசரி’ இதழ் புகழ்ந்துரைத்துள்ளது.

“உரைநடையில் தமிழன்னையை உலவவிட்டு அழகு பார்த்தவர்களும் கிறிஸ்துவக் குருக்களே. ஒப்பியல் இலக்கணத்தைத் தமிழுக்கு அறிமுகம் செய்து வளர்த்தவரும் அத்தொண்டர்களே; எவருமே செய்யத் துணியாத தன்னிகரற்ற தனிச்சேவை யன்றைத் தமிழுக்குக் கொடுத்துச் சென்றார் பன் மொழிப் புலவர் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்”என அருட்திரு சா.ம. செல்வரட்னம் புகழாரம் சூட்டி யுள்ளார்.

“அவர் திருமறை ஆசிரியராக இருப்பதுடன் வரலாற்று ஆசிரியராகவும், ஒப்பியல் மொழி வல்லுநராகவும், தமிழின் தொண்டையும் ஒப்பற்ற தன்மையையும் எடுத்துக்காட்டும் வல்லுநராகவும் விளங்குகிறார். அவருடைய கடல் போன்ற புலமையைக் காட்டுவதற்கு அவர் யாத்த ‘சொற் பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதி’யே போதிய சான்று” என ‘தமிழ்த்தூதுவர்’ தனிநாயகம் அடிகளார் சுவாமி ஞானப்பிரகாசருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

“ஒரு நூற்றாண்டுக்கு முன்தோன்றித் தமிழ்த் தாய்க்குத் தொண்டாற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் பேரறிஞராவார். இவர் முற்றும் துறந்த முனிவராகச் சமயப்பணி செய்தாரெனினும் தமிழ் மொழிப் பற்றினைத் துறக்கவில்லை. தமிழ் மொழியின் பெரும் பழமையையும், தனிச்சிறப்பையும், நுட்ப அமைப்பையும் நுணித்துணர்ந்து உலகத்துக்கு எடுத்துக்காட்டினார். பிறர் இலகுவில் செய்ய முடியாத இத்தொண்டை செய்வதற்கு இரவு பகலாக அயராது உழைத்தார்.” என ‘செந்தமிழ்க்கலாமணி’ வித்துவான் க.பொ.இரத்தினம் தமது ஆய்வில் பதிவு செய்து உள்ளார்.

கொழும்பு விவேகானந்தா மண்டபத்தில் 1936 ஆம் ஆண்டு, தமிழ்ச் சொற்பிறப்பையிட்டு சுவாமி ஞானப் பிரகாசருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவ் விழாவில் சுவாமி ஞானப்பிரகாசர் ஆற்றிய உரையை செவிமடுத்த, அமெரிக்க நாட்டு அறிஞரான கொக்லர் “நீங்கள் அமெரிக்க நாட்டிலே பிறந்திருந்தால், உங்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஊர்கள் தோறும் சுற்றுவார்கள்” எனத் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டுப் புலவர்களையும், ஈழநாட்டுப் புலவர்களையும் கொண்ட தமிழ்ப்புலவர் மன்றம் 1944 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சுவாமி ஞானப் பிரகாசரின் ஒப்பற்ற தமிழ்ப் பணியையும், ஆராய்ச்சித் திறனையும் பாராட்டி நடத்திய விழாவில் அவருக்கு ‘சொற்கலைப் புலவர்’ என்னும் பட்டமளித்துச் சிறப்பித்தது.

மேலும், அவ்விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ் நாட்டறிஞரான ‘நாவலர்’ சோமசுந்தர பாரதியார் தமது உரையில், “தமிழ்ச் சொற்கள் தழைத்தெழுந்த தகைமையைச் சரிவர ஆராய்ந்து, பல மொழி நூல் முடிவு கொண்டு விளக்கி, தமிழ்ச் சொற் களின் சிறப்பைக் கண்ட ஞானப்பிரகாசர் தமிழ் நாட்டில் சிலை அமைத்துப் புகழப்பட வேண்டியவர்” எனப் பாராட்டினார்.

தற்போதைய தமிழக அரசு ஸ்டாலின் தலைமையில் ஆட்சி செய்கிறது .அது ஈழத்து அறிஞர்களுக்கு நல்ல கௌரவம் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்
சினிமா மோகத்தை அல்லது சினிமாத் தயாரிப்பை தமிழின் வளர்ச்சிக்கு பயன்படுத்தவேண்டும் இதை எல்லோரும் மனதில் கொண்டு தமிழுக்காக பணி செய்வோமாக.