NewsWorld

இலங்கை பொலிசாருக்குப் பயிற்சியளிப்பதை ஸ்கொட்லாந்து பொலிஸ் நிறுத்த வேண்டும் – முன்னாள் ஐ.நா. விசாரணையாளர்


ஸ்கொட்லாந்தில் புகலிடம் கேட்டு வந்திருக்கும் தமிழ் அகதிகள் மீது இலங்கைப் பொலிசார் புரிந்த அட்டூழியம் மீது விசாரணகளை மேற்கொள்ளவேண்டுமென உலக மனித உரிமைகள் வளாகத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் ஐ.நா.விசேட தூதுவருமான பேராசிரியர் மான்ஃப்றெட் நோவார்க் கேட்டுள்ளார்.

2007 இல் தான் வெளிக்கொணர்ந்த இலங்கைப் பொலிசாரின் துன்புறுத்தல் முறைகள் இன்னமும் இலங்கைப் பொலிசாரினால் பின்பற்றப்படுகின்றன எனவும், ப்கலிடக் கோரிக்கையாளர்களின் வாக்குமூலங்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில், இலங்கைப் பொலிசாருக்குப் பயிற்சியளிப்பதை ஸ்கொட்லாந்து பொலிஸ் நிறுத்த வேண்டுமெனவும் பேராசிரியர் நோவார்க் கேட்டுள்ளார்.

மேர்செடீஸ் விலால்பா, பா.உ.

கைதிகள் அவரவர் அவயவங்களிலோ அல்லது விரல்களிலோ தொங்கவிடப்படுவது, பெற்றோல் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பைகளைப் பாவிப்பது போன்ற துன்புறுத்தல் முறைகளை நான் கண்டுள்ளேன். இது இப்போதும் கையாளப்படுகிறது என்பது நிரூபிக்கப்படும் பட்சத்தில் ஸ்கொட்லாந்து பொலிஸ் இலங்கைப் பொலிசாருக்குப் பயிற்சியளிப்பதை நிறுத்தவேண்டுமென அவர் சண்டே போஸ்ட் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

“இவ் விடயத்தில் இலங்கை ஒத்துழைப்புத் தராது போனாலோ அல்லது குற்றமிழைத்தவர்களை அந்நாடு நீதிமன்றத்தில் நிறுத்த மறுத்தாலோ அவ்வாட்சியாளரை சர்வதேச நீதிமன்றங்களில் நிறுத்தவேண்டும்” என பேராசிரியர் நோவார்க் மேலும் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பொலிசாரினால் பயிற்சியளிக்கபடும் இலங்கைப் பொலிசார் புரியும் அட்டூழியங்கள் பற்றி பல பாராளுமன்ற உறுப்பினர்களும், மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வருகின்றன.

இலங்கைப் பொலிசாருக்குப் பயிற்சியளிப்பதன் மூலம் மனித உரிமை மீறல்களைப் புரிவதற்கு இலங்கை ஆட்சியாளருக்கு அங்கீகாரம் அளித்ததுமல்லாது அம் மீறல்களுக்குத் திரைமறைவையும் கொடுத்து வருகிறது என பாராளுமன்ற உறுப்பினர் மேர்செடீஸ் விலால்பா பிரித்தானிய தூதரகத்துக்கு சமீபத்தில் கடிதமொன்றை எழுதியிருக்கிறார்.

“ஸ்கொட்லாந்து பொலிசாரினால் தொடர்ந்து வழங்கப்படும் பயிற்சி, துன்புறுத்தல், பாலியல் வன்முறை ஆகியவற்றைப் பெருமளவில் புரிந்துவரும் ஆட்சியாளரோடு எமக்கு இருக்கும் நெருக்கமான உறவைப் பறைசாற்றும் ஒன்றாக அமைந்துவிடும் ஆபத்து உண்டு” என டெமோகிறட் உறுப்பினரான அலெக்ஸ் கோல்-ஹமில்ட்டன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.



இவ்விடயம் தொடர்பாக மனைத உரிமை அமைப்புகள் பலவும் தமது அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன. ஸ்கொட்லாந்தைச் சேர்ந்த பக்ஸ் கிறிஸ்டி என்ற அமைப்பு “இலங்கையில் துன்புற்த்தல்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பதில் இதுவே முதலாவது நடவ்டிக்கை” எனத் தெரிவித்துள்ளது.

“ஸ்கொட்லாந்து பாராளுமன்றம் இந் நடவடிக்கையை எடுக்குமானால், குற்றமிழைப்பவர்கள் தமது தண்டனைகளிலிருந்து தப்ப முடியாது என்ற உணமியைப் புரிந்து கொள்வார்கள்” என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டத்தின் (ITJP) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரான பிரான்சிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

” ராஜபக்ச ஆட்சிக்கு வந்ததிதிலிருந்து, மனித உரிமை மீறல்கள் விடயத்தில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சிறிதளவு முன்னேற்றங்கள் கூட பிந்தள்ளப்பட்டுவிட்டன. சர்வதேசங்களின் தொடர்ச்சியான அவதானிப்பும், அழுத்தங்களுமே இலங்கையின் சிறுபான்மையினர், செயற்பாட்டாளர், ஊடகவியாலாளர் போன்றோர் எதிர்கொள்ளும் ஆபத்தைக் குறைக்க வழிசெய்யும்” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தென்னாசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்கூலி தெரிவித்துள்ளார்.

அதிகரித்துவரும் அழுத்தம் தொடர்பாகக் கருத்துக்கூறிய ஸ்கொட்லாந்து உதவி பொலிஸ் அதிபர் கரி றிச்சீ அவர்கள், “இலங்கையில், இலங்கையர்களால் நடத்தப்படும் உரிமை மீறல்களை விசாரிக்கும் அருகதை ஸ்கொட்லாந்து பொலிசாருக்கு இல்லை எனவும் இவ்விடயம் தொடர்பாக பாராளுமன்ற வொசாரணை ஒன்றை மேற்கொள்வதா இல்லையா என்பதை ஸ்கொட்லாந்து பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பொலிசாருக்கு பயிற்சியளிப்பதை நிறுத்தும் அதிகாரம் ஸ்கொட்லாந்து நீதியமைச்சர் கீத் பிரவுணிடமே இருக்கிறது என இவ்விடயத்தில் அழுத்தங்களைக் கொடுத்துவரும் செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.