இந்தியாவிற்கும் பலாலிக்குமிடையில் விரைவில் விமான சேவை – விக்கிரமசிங்க
25 ஆகஸ்ட் 2019:
இந்தியாவிற்கும் பலாலி விமானத்தளத்திற்குமிடையேயான விமானப் போக்குவரத்து இவ் வருட இறுதிக்குள் ஆரம்பிக்கும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நேற்று, சனிக்கிழமையன்று, மூதூர்-மட்டக்களப்பு வீதிக் கட்டுமான வேலைகளை ஆரம்ப நிகழ்வில் பேசும்போது அவர் அதைத் தெரிவித்தார்.

” பலாலி, கட்டக்களப்பு விமான நிலையங்கள் மூலம் நாம் உல்லாசப்பயணிகளைக் கொண்டுவருவோம். சுற்றுலா அபிவிருத்திச் சபையுடன் தொடர்புகொண்டு விசாரித்த போது, இவ் வருட இறுதிக்குள் சுமார் 2 மில்லியன் உல்லாசப் பயணிகள் வரக்கூடுமென்று சொன்னார்கள். 2018 இல் 2.3 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தார்கள். உயிர்த்த ஞாயிறுக் குண்டுவெடிப்புக்களின் பின்னர் சுற்றுலாப் பயணிகள் வருவது அதிகரிக்கிறது என்பதையே அது காட்டுகிறது. VAT வரி அதிகரிப்பை வைத்து எம்மை விமர்சித்தவர்கள் இப்போது அதனால் ஏற்படும் நன்மைகளைப் பார்க்கலாம்” என அவர் மேலும் தெரிவித்தார்.